இலங்கையில் 16-22 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களின் குற்றச் செயல்கள் அதிகரிப்பு
26 தை 2026 திங்கள் 16:09 | பார்வைகள் : 418
கடந்த 10 வருடகால பகுதியில், 16 முதல் 22 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களின் குற்றவியல் நடத்தைகள் அதிகரித்துள்ளதாக சட்ட உளவியல் விசேட வைத்திய நிபுணர் தாரக பெர்னாண்டோ தெரிவிக்கின்றார்.
இது தற்போது எமது நாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதுடன், உலகம் முழுவதிலும் இந்த நிலைமையை அவதானிக்க முடிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய மனநல நிறுவகம் 100 ஆண்டுகளை பூர்த்தி செய்வதை முன்னிட்டு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வைத்தியர் தாரக பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கு அண்மித்த காலப்பகுதியின் புள்ளிவிபரங்களைப் பார்க்கும்போது, நீதிமன்றத்தினால் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை சுமார் 200 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது ஒரு பேரழிவு நிலைமை எனவும், இது இப்படியே தொடருமாயின் எதிர்காலத்தில் 16 முதல் 22 வயதுக்கு இடைப்பட்டவர்களால் சிறைச்சாலைகள் நிரம்பி வழியும் எனவும் வைத்தியர் வலியுறுத்தினார்.
அத்துடன் மனநலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் குற்றவாளிகள் என்ற கருத்து சமூகத்தில் வேரூன்றியுள்ளதாகவும், அது முற்றிலும் தவறான கட்டுக்கதை என்றும் வைத்தியர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இத்தகைய நபர்களைத் திறந்த மனதுடன் நோக்கி, அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்குவதன் ஊடாக அவர்களை மாற்றியமைக்க முடியும் எனவும் வைத்தியர் மேலும் தெரிவித்தார்.
மேலும், இத்தகைய நபர்களிடம் ஆக்கபூர்வமான திறன்கள் காணப்படுவதாகவும், அவர்கள் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தும் ஆற்றலை வேறு விடயங்களில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களுக்குப் புனர்வாழ்வளிக்க முடியும் எனவும் சட்ட உளவியல் விசேட வைத்திய நிபுணர் தாரக பெர்னாண்டோ கருத்து வெளியிட்டார்.
இத்தகையவர்களுக்குப் புனர்வாழ்வளிப்பதற்கு விஞ்ஞான ரீதியான முறைகளைப் பின்பற்றிச் செயற்பட வேண்டும் எனவும் தாரக பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
தெற்காசியாவிலேயே மிகப்பெரிய சட்ட உளவியல் மருத்துவப் பிரிவு எமது நாட்டில் அமைந்துள்ளதாகவும் வைத்தியர் இங்கு மேலும் தெரிவித்தார்.
இது குறித்துத் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட வைத்தியர், நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்படும் நோயாளிகள் அந்தக் குற்றத்தைச் செய்த நேரத்தில் அவர்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என்பதைக் கண்டறிதல், நீதிமன்றத்தில் அவர்களால் மீண்டும் வாதாட முடியுமா என்பதை ஆராய்தல் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியன சட்ட உளவியல் மருத்துவப் பிரிவின் பணிகளாகும் எனத் தெரிவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan