Paristamil Navigation Paristamil advert login

ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றாத திமுக அரசு: இபிஎஸ் கண்டனம்

ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றாத திமுக அரசு: இபிஎஸ் கண்டனம்

5 மார்கழி 2025 வெள்ளி 09:04 | பார்வைகள் : 153


திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ஐகோர்ட் அளித்த தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியாது என கங்கணம் கட்டிக்கொண்டு, சட்ட நிர்ணயங்களுக்கு முற்றிலும் விரோதமான அரசாக தன்னை நிரூபித்துள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஏவல்துறை, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பக்தர்கள் அனைவரையும் அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறதா இந்த முதல்வரின் அரசு?

ஐகோர்ட்டின் இரு அமர்வுகள் அளித்த உத்தரவுக்குப் பிறகும், திமுக ,அரசு இயந்திரத்தை பயன்படுத்தி இப்படி அடாவடித்தனத்தை கையாள்வதன் மூலம், இதை வேண்டுமென்றே பெரிய பிரச்சனையாக்கி, தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தை சிதைக்கும் நோக்கில், தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக குளிர்காயத் துடிப்பது தெள்ளத்தெளிவாகிறது.

ஐகோர்ட்டின் தெளிவான உத்தரவுக்குப் பிறகும், ஆட்சியில் இருக்கும் திமுக-வை மகிழ்விக்கவோ என்னவோ, சில அதிகாரிகளும் இத்தகைய நீதிமன்ற அவமதிப்பு செயல்களுக்கு துணைபோவது வருத்தமளிக்கிறது. இத்தகைய செயல்கள், கடும் கண்டணத்திற்குரியது. மக்களாட்சி விழுமியங்களை நசுக்கும் அராஜகப் போக்கை உடனடியாக கைவிட்டு, கைது செய்யப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக விடுவித்து, ஐகோர்ட் தீர்ப்பை நிறைவேற்றுமாறு ஸ்டாலின் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் இபிஎஸ் கூறியுள்ளார்.

கண்டனம்


முன்னதாக அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில் மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக ஐகோர்ட் தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்தத் தவறியது, இதனால் கடந்த இரண்டு நாட்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க கபட நாடகம் ஆடும் திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

'எம்மதமும் சம்மதம்' - எம்மதத்தையும் சாராமல், நடுநிலையோடு ஆட்சி புரிபவர் சிறந்த ஆட்சியாளர் என்பதை மறந்து தேவையற்ற பிரச்சனைக்கு வழிவகுத்த முதல்வர் ஸ்டாலின் மாடல் அரசுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்