Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

தே.மு.தி.க.,வுக்கு ஆறு தொகுதிகளா? வதந்தி பரப்பிய கட்சி அழிந்து போகும்!: பிரேமலதா

தே.மு.தி.க.,வுக்கு ஆறு தொகுதிகளா? வதந்தி பரப்பிய கட்சி அழிந்து போகும்!: பிரேமலதா

26 மார்கழி 2025 வெள்ளி 07:23 | பார்வைகள் : 227


தே.மு.தி.க., தொகுதி பங்கீடு தொடர்பாக எந்த கட்சியில் இருந்து வதந்தி பரப்பப்பட்டதோ, அந்த கட்சிக்கு அழிவு ஏற்படும்,” என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கூறினார்.

தே.மு.தி.க., தனது கூட்டணி அறிவிப்பை, கடலுார் மாவட்டம் பாசார் கிராமத்தில் ஜனவரி 9ம் தேதி நடக்கும் மாநாட்டில் அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,விற்கு ஆறு 'சீட்' ஒதுக்கியதாக செய்தி பரவியது. இதனால், தே.மு.தி.க., தலைமை அதிர்ச்சி அடைந்தது.

இந்நிலையில், சென்னையில் தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்ற பின், அக்கட்சி பொதுச்செயலர் பிரேமலதா அளித்த பேட்டி:

சமூக வலைதளத்தில் வந்த தகவலை வைத்து, தே.மு.தி.க., கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக, 'டிவி' சேனல்களில் செய்தி வெளியாகி உள்ளது.

இதனால், அவற்றின் மீதுள்ள நம்பிக்கை, மக்களுக்கு குறைந்து விடும். யாரோ சொன்னதை வைத்து செய்தி போடுவதை கைவிட வேண்டும்.

தே.மு.தி.க., கூட்டணி அறிவிப்பை, ஜனவரி 9ம் தேதி வெளியிடுவதாக தெளிவாக கூறி வருகிறோம். எங்கள் கட்சி தொடர்பான அறிவிப்பை நாங்கள்தான் வெளியிடுவோம்.

தே.மு.தி.க., கூட்டணி தொடர்பான அறிவிப்பு, எந்த கட்சியில் இருந்து வந்ததாக சொல்லப்பட்டு வதந்தி பரப்பப்பட்டதோ, அந்த கட்சிக்கு அது அழிவை ஏற்படுத்தும்.

அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் தான் ஆலோசனை செய்தன. தொகுதி பங்கீடு உத்தேச பட்டியலை வெளியிட்டது அ.தி.மு.க.,வா, பா.ஜ.,வா என தெரியாமல் செய்தி போடக்கூடாது.

விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி, வரும் 28ல், சென்னை கோயம்பேடில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடக்கிறது.

இதில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளோம். சீமான், விஜய் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்