Paristamil Navigation Paristamil advert login

இந்தியா - பாக்., போரை தனக்கு சாதகமாக்கிய சீனா: ஆயுத சோதனை, விற்பனை தீவிரம்

இந்தியா - பாக்., போரை தனக்கு சாதகமாக்கிய சீனா: ஆயுத சோதனை, விற்பனை தீவிரம்

23 கார்த்திகை 2025 ஞாயிறு 08:40 | பார்வைகள் : 103


இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடந்த மோதலை, சீனா தன் ஆயுதங்களை சோதிப்பதற்காக பயன்படுத்தி கொண்டதாக அமெரிக்க பார்லிமென்ட் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள சுற்றுலா தலமான பஹல்காமில், கடந்த ஏப்ரல் 22ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணியர் உட்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதலுக்கு நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் ஆதரவு அமைப்பான, 'தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' பொறுப்பேற்றது.

இத்தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் நிலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மீது குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது.

'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், கடந்த மே 7 முதல் 10ம் தேதி வரை நான்கு நாட்கள் நடந்த இந்த மோதலை, நம் மற்றொரு அண்டை நாடான சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக அமெரிக்க பார்லிமென்ட் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலை, சீனா தன் புதிய மற்றும் மேம்பட்ட ஆயுத அமைப்புகளுக்கு சோதனை களமாகவும், விளம்பர மேடையாகவும் பயன்படுத்திக் கொண்டது. இந்த மோதலின்போது பாகிஸ்தான், சீனாவிடம் இருந்து வாங்கிய ஆயுதங்கள் மற்றும் உளவுத் தகவல்களை பெருமளவில் பயன்படுத்தியது.

போலி சமூக வலைதளம் சில நவீன சீன தயாரிப்புகள் முதன்முதலாக இப்போரில் பயன்படுத்தப்பட்டன. அதில், எச். க்யூ., - 9 வான் பாதுகாப்பு அமைப்பு, பி.எல்., - 15 ஏவுகணை, ஜே -10சி போர் விமானங்கள் குறிப்பிடத்தக்கவை.

மேலும், நெருக்கடி நிலவிய நான்கு நாட்களிலும், இந்திய ராணுவ நிலைகள் குறித்து, பாகிஸ்தானுக்கு சீனா தகவல்களை வழங்கியதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

மோதல் முடிந்த ஒரு மாதத்துக்கு பின், ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பெரிய புதிய ஆயுத தொகுப்பை சீனா, பாகிஸ்தானுக்கு விற்க முன்வந்தது.

மேலும், இந்தியா பயன்ப டுத்திய பிரான்ஸ் தயாரிப்பான 'ரபேல்' போர் விமானங்களின் விற்பனையை தடுக்கும் வகையில், சீனா ஒரு தவறான தகவலையும் பரப்பியது.

சீனா ஆயுதங்களால், ரபேல் விமானங்கள் தாக்கி அழிக்கப்பட்டதாக கூறப்படும் ஏ.ஐ., வீடியோ படங்களை பரப்ப போலி சமூக வலைதள கணக்குகளை சீனா பயன்படுத்தியது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்