Paristamil Navigation Paristamil advert login

ஆம்ஸ்ட்ராங் கொலை : சி.பி.ஐ., விசாரணைக்கான உத்தரவை திரும்ப பெறும்படி தமிழக அரசு மனு

ஆம்ஸ்ட்ராங் கொலை : சி.பி.ஐ., விசாரணைக்கான உத்தரவை திரும்ப பெறும்படி தமிழக அரசு மனு

19 கார்த்திகை 2025 புதன் 14:42 | பார்வைகள் : 633


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ., விசாரணை தொடரும் என்ற உத்தரவை திரும்ப பெறக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி, சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு அருகே வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இது குறித்து சென்னை, செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் பல கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதால் வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரி, ஆம்ஸ்ட்ராங்-கின் சகோதரர் இம்மானுவேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.,-க்கு மாற்றி கடந்த மாதம் 24ல் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வு, சி.பி.ஐ., விசாரணைக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய மறுத்ததோடு, குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கும் தடை விதித்தது.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெறக்கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்