Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவின் பல விமான நிலையங்களில் விமான போக்குவரத்து பாதிப்பு

அமெரிக்காவின் பல விமான நிலையங்களில் விமான போக்குவரத்து பாதிப்பு

8 ஐப்பசி 2025 புதன் 11:51 | பார்வைகள் : 184


அமெரிக்காவின் பல முக்கிய விமான நிலையங்களில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் (Air Traffic Controllers) பற்றாக்குறை காரணமாக கடுமையான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க விமானப் போக்குவரத்து ஆணையம் (FAA) இந்த விடயம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிகாகோவின் ஓ’ஹேர் சர்வதேச விமான நிலையம் (O’Hare International Airport) செவ்வாய்க்கிழமை இரவில் போதுமான கட்டுப்பாட்டாளர்கள் இல்லாத நிலையை எதிர்நோக்கி வருகிறது.

நாஷ்வில்லில் (Nashville) பல கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் அங்குள்ள விமான வழிநடத்தல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இது தற்போது ஏழாவது நாளாக நீடிக்கும் அரசாங்க முடக்கம் (Government Shutdown) காரணமாக  அலுவலகங்களில் உருவாகி வரும் பரவலான பிரச்சினைகளில் ஒன்றாகும். அமெரிக்காவின் ஹூஸ்டன், நியூஆர்க், லாஸ் வேகாஸ், போஸ்டன், அட்லாண்டா, பிலடெல்பியா, டல்லாஸ் உள்ளிட்ட நகரங்களில் செவ்வாய்க்கிழமை இரவில் பல்வேறு நேரங்களில் கட்டுப்பாட்டாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அரசாங்க முடக்கம் காரணமாக பல கட்டுப்பாட்டாளர்கள் நோய்விடுப்பில் இருப்பதாகவும், இதனால் பணியாளர் நெருக்கடி தீவிரமடைந்துள்ளதாக போக்குவரத்து செயலாளர் ஷான் டஃபி (Sean Duffy) தெரிவித்துள்ளார்.

விமானப் பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் விமான கட்டுப்பாட்டாளர்கள் முக்கிய சேவை பணியாளர்கள் என்பதால், அரசாங்க நிதியின்றியும் அவர்கள் பணிக்கு வர வேண்டியது கட்டாயமாகும்.


எனினும், குறைந்த அளவிலான பணியாளர்கள் கூட வராமை விமான சேவைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுப்பாட்டாளர்கள் இதுவரை சம்பளம் தவறவில்லையெனினும், அக்டோபர் 14 மற்றும் 28 திகதிகளில் சம்பளம் கிடைக்காமல் போகும் அபாயம் இருப்பதால் பெரும் பொருளாதார அச்சம் நிலவுகிறது.    

 

வர்த்தக‌ விளம்பரங்கள்