Paristamil Navigation Paristamil advert login

கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகம்: அரசு பெருமிதம்

கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகம்: அரசு பெருமிதம்

25 ஆவணி 2025 திங்கள் 10:55 | பார்வைகள் : 611


பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியதால், சிறந்த தரமான பள்ளிக்கல்வியை வழங்குவதில், தமிழகம் இந்திய அளவில் சிறந்து விளங்குகிறது' என, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

அரசின் அறிக்கை:

தமிழக மாணவர்கள் ஒவ்வொருவரும் உயர் கல்வி பெற வேண்டும் என, பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் உருவாக்கி வருகிறார். புதிதாக வெளியிடப்பட்ட, மாநில கல்விக்கொள்கை, கல்வியாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

மாநிலம் முழுதும், 28,067 அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், வேகமான இணையவசதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6,540 அரசு பள்ளிகளில், பணிகள் நடந்து வருகின்றன.

மாவட்டத்திற்கு ஒரு பள்ளி வீதம், 38 மாதிரி பள்ளிகள், 352 கோடி ரூபாயில் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றில் படித்தவர்கள், முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 519 கோடி ரூபாயில், 8,209 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அரசு பள்ளிகளில் படிக்கும் 16.7 லட்சம் மாணவ - மாணவியர் பயன்பெறும் வகையில், 455 கோடி ரூபாய் செலவில், 22,931 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

மாநிலம் முழுதும் உள்ள, 79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு, 81 கோடி ரூபாயில், கைக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

முதல்வர் ஸ்டாலின், 2021ல் ஆட்சி பொறுப்பேற்ற பின், பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்ததால், சிறந்த தரமான பள்ளிக்கல்வியை வழங்குவதில், இந்திய அளவில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்