Paristamil Navigation Paristamil advert login

மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம்: அமித் ஷா உறுதி

மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம்: அமித் ஷா உறுதி

8 பங்குனி 2025 சனி 07:59 | பார்வைகள் : 5729


தமிழுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தரவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறி இருந்த நிலையில், 'மாநில மொழிகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை, ராணிப்பேட்டையில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 56வது ஆண்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அவர் தொழில் பாதுகாப்புப் படை தின அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: சி.ஐஎஸ்.எப்., பங்கு முக்கியமானது. ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிரதமர் மோடி வந்த பிறகு தான் சி.ஐ.எஸ்.எப்., தேர்வு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத முடிகிறது.

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை மாநில மொழிகளில் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, தமிழுக்கும் அதன் பாரம்பரியத்திற்கும் முக்கியத்துவம் தருகிறார். தமிழகத்தின் வளமான கலாசாரம் இந்திய பாரம்பரியத்தை வலுப்படுத்தி உள்ளது.

2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசாக மாற்ற பிரதமர் மோடி சபதம் செய்துள்ளார். 2027ம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த இலக்குகளை அடைவதற்கு சி.ஐஎஸ்.எப்., பெரிதும் பங்களிக்கிறது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.